Monday, March 31, 2014

இனம்..




இனம் என்ற சொல்லுக்குத் தமிழ் ஆங்கில அகராதியிலே காணப்படும் இணையான ஆங்கிலச் சொல்….race,ethnicity,breed.
இங்கு பிறப்பின் அடிப்படையில் இனம் தீர்மானிக்கப்படுகிறது
ஆனால் திருவள்ளுவர் இந்த இனம் என்ற சொல்லை எப்பொருளில் பயன்படுத்துகிறார்?
சிற்றினஞ்சேராமை என்று ஓர் அதிகாரம்
அதில் முதல் குறள்….

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.” (451)

இதற்கான தெளிவுரைகள் கீழே…

தீய குணத்தாரோடு சேரப் பெரியோர் அஞ்சுவர்; சிறியாரோ அவர்களைத் தம் உறவாகவே கருதி விடுவர்…..(சாலமன் பாப்பையா)
பெரியோர், கீழ்மக்களின் கூட்டத்தோடு சேர மாட்டார்கள். ஆனால் சிறியோர்களோ இனம் இனத்தோடு சேருமென்பதுபோல் அந்தக் கீழ் மக்கள் கூட்டத்துடன் சேர்ந்து கொள்வார்கள்…..(கலைஞர்)
பெரியோரின் இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும், சிறியோரின் இயல்பு அதையே சுற்றமாக எண்ணித் தழுவிக் கொள்ளும்.... (மு.வ.)

ஆக இங்கு இனம் என் று சொல்லப்படுவது பிறப்பின் அடிப்படையில் அல்ல. குணத்தின்,செயலின், அடிப்படையில் என்பது தெளிவாகிறது.

தீய குணம் உடையோர்,தீய செயல் புரிவோர், கீழ்மக்களாவர்.அதுவே சிற்றினம்

இதே அதிகாரத்தில் இன்னொரு குறள்...

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு. (452)

இதற்கான பொருள்....
தான் சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீர் தன் இயல்பை இழந்து, நிலத்தின் இயல்பாகவே மாறிவிடம்; மனிதரின் அறிவும் அவர் சேர்ந்த இனத்தின் இயல்பாகவே ஆகிவிடும்.....(சாலமன் பாப்பையா)
சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீரானது வேறுபட்டு அந்த நிலத்தின் தன்மையை அடைந்துவிடும் அதுபோல மக்களின் அறிவும், தாங்கள் சேர்ந்த இனத்தின் தன்மையைப் பெற்றதாகிவிடும்.....(கலைஞர்)
சேர்ந்த நிலத்தின் இயல்பால் அந்த நீர் வேறுபட்டு அந் நிலத்தின் தன்மையுடையதாகும், அதுபோல் மக்களுடைய அறிவு இனத்தின் இயல்பினை உடையதாகும்.... (மு.வ.)

இந்த இனம் என்னும் சொல்லைக் கூடா நட்பு என்னும் அதிகாரத்திலும் காண்கிறோம்.

இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்...(822)

இதற்கான தெளிவுரை..

வேண்டியவர் போலத் தோன்றி, மனத்தால் வேண்டாதவராக இருப்பவரோடு உண்டான நட்பு பாலியல் தொழிலாளர் மனம் போல வேறுபடும்....(சாலமன் பாப்பையா)

உற்றாராக இல்லாமல் உற்றார்போல நடிப்பவர்களின் நட்பு, மகளிருக்குரிய நற்பண்பு இல்லாமல் அப்பண்பு உள்ளவர் போல நடிக்கும் விலை மகளிரின் மனம்போல உள்ளொன்றும் புறமொன்றுமாக இருக்கும்.....(கலைஞர்)

இனம் போலவே இருந்து உண்மையில் இனம் அல்லாதவரின் நட்பு, பொதுமகளிரின் மனம் போல உள்ளொன்று புறமொன்றாக வேறுபட்டு நிற்கும்...... (மு.வ.)

இங்கு இனம் என்பது அன்புள்ளவர்,உற்றவர்,வேண்டியவர் என்ற பொருளில் சொல்லப்பட்டிருக்கிறது.

இவையே இனம் பற்றி வள்ளுவர் சொல்வது







Friday, March 28, 2014

கருத்துக்கணிப்பும்,மதச்சார்பின்மையும்!




இந்தக் கருத்துக் கணிப்பு மிக நேர்மையாக,சார்புகள் எதுவும் இன்றி நடத்தப்படுகிறது.

எல்லா வகுப்பைச் சேர்ந்தவர்களும் சரியாவிகிதாசாரத்தில் கணிப்பில் வாக்களிக்கச் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

வாக்களிப்பவர்கள் சொல்லும் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு நடப்பவர் பலர் இருக்கும் படியான ஒரு அளவு கோலைக் கருத்தில் கொண்டே இக் கருத்துக் கணிப்பு நடத்தப் படுகிறது.

உங்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு சீட்டு கொடுக்கப்படும்.அதில் இருப்பவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து குறியிட்டுப் பெட்டியில் போடவும்.

வாக்குப்பதிவு முடிந்த்தும்,வாக்குகள் எண்ணப்பட்டு,கருத்துக்கணிப்பின் முடிவுகள் அறிவிக்கப்படும்.”

“ஏதாவது கேள்விகள் உண்டா?”

ஐமபது மாணவர்கள் கூடியிருந்த அக்கூட்டத்தின் முன் நின்று அந்த இளைஞன் சொல்லி முடித்தான்.

கூட்டத்திலிருந்து ஒரு மாணவன் கேட்டான்”இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெயர்கள் பற்றி ஒரு சந்தேகம்”

”என்ன?”

”கல்லூரிப் பேரழகியைத் தேர்ந்தெடுக்கும் கருத்துக் கணிப்பு இது.இதில் உள்ள பெயர்கள்.. திவ்யா,மும்தாஜ்,எஸ்தர்,அமர்ஜித் கௌர்.ஆனால் பேரழகிகளில் ஒருத்தி எனச் சொல்லப் படக்கூடிய ராதாவின் பெயர் இதில் ஏன் இல்லை?”

முதல் மாணவன் சொன்னான்”நீ சொல்வது உண்மைதான்.ஆனால் இது மதச் சார்பற்ற கருத்துக்கணிப்பு.எனவே அந்த அடிப்படையிலேயே பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.நம் மதச் சார்பின்மையை நாம் நிலை நாட்டுவோம்!”

எல்லா மாணவர்களும் பலத்த கரவொலி எழுப்பினர்

“தலைவன் நீதான்”என ஒருமித்துக் குரல் எழுப்பினர்.

வாக்களிப்பு தொடங்கியது!

Thursday, March 27, 2014

வயசுக்கு வந்த பெண்!



இன்று காலை தங்கமணியின் சூடான செய்தி—”என்னங்க! 4-பி ராதா மக கலா பெரியவ ளாயிட்டா!”

எவ்வளவு முக்கியமான செய்தி பாருங்கள்.

சீனிவாசன் பதவி விலகினால் என்ன,விலகாவிட்டால் என்ன;

அரசியலில் ஊழல்கள் நடந்தால் என்ன நடக்காவிட்டால் என்ன;

தங்கமணிகளுக்கு இது முக்கியச் செய்திதான்!

ஆனால் எனக்குக் கொஞ்சம் வருத்தம்தான்.

ஆம்!ஒரு குழந்தை பதினோரு வயதில் பெரிய மனுசி ஆகி விட்டாள்.

புதிய பொறுப்புகள் ,புதிய கவலைகள் அவளுக்கும் அவள் பெற்றோருக்கும் வந்து சேர்ந்து விட்டன.

இனி திரும்பி வருமா அந்தகள்ளமில்லாக் குழந்தைப் பருவம்?

இப்பொதெல்லாம் பழைய காலத்தை விடப் பெண்கள் விரைவிலேயே பூப்பெய்தி விடுகிறார்களே,ஏன்?

மாறி வரும் வாழ்க்கைச் சூழல்கள்,நாகரிகம்,உணவுப் பழக்கங்கள்,பல காரணங்களால் ஏற்படும் மன அழுத்தம்,இவையெல்லாமே சில காரணங்கள்.

திருமணம் 18 வயதில்தான் எனச் சட்டம் சொல்கிறது.

ஏனெனில் அது வரை மனம் முதிர்ச்சியடைவதில்லை.

ஆனால் வயது ,பருவம் முதிர்ச்சியடைந்து விட்தே!

பள்ளிப் பருவத்திலேயே காதல் தொடங்கி விடுகிறதே!

பெற்றோர் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டல்லவா இருக்க வேண்டிய இருக்கிறது!

ஆக தற்காலத்தில் பெற்றோர்களின்பொறுப்பு,கவலை எல்லாம் அதிகமாகி விட்டது .

பொறுப்பு அதிகமாகி விட்டது என்பதைக் குறிக்கவே இதைச் சொல்கிறேன்.திருமண வயதைக் குறைக்க வேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன் எனத் தவறாக எண்ண வேண்டாம்!

முன்பெல்லாம் இந்த நிகழ்வைச் சிறப்பாக் கொண்டாடுவார்கள்

திரைப்படங்களில்தான் பார்த்திருக்கிறேன்--முறைமாமன் ஓலைத்தட்டி பின்னி அதன் மறைவில் பெண் அமர்வதையும் நீராட்டு என்பது பெரும் விசேசமாகக் கொண்டாடப் படுவதையும். இப்போதெல்லாம் கிராமங்களில் கூட இதெல்லாம் நடக்கிறாதோ என்னவோ தெரியாது.

சில பெண்கள் பூப்பெய்தாமலே இருந்து விடுகிறார்கள்.

அவ்வாறு பூப்பெய்தாமலே இருந்து விடும் பெண்களை ‘இருசி’ என்று சொல்வார்கள்

அப்படிப்பட்ட ஒரு பெண்ணைப் பற்றிய   தனது தென்னங்கீற்று என்ற நாவலை திரு கோவி மணிசேகரன் இயக்கினார்.படம் தமிழில் தோல்வி அடைந்தது

சரி, பெண் வயசுக்கு வருவதைப் பெரிதாகச் சொல்லும் நாம் ஆண் வயதுக்கு வருவதைக் கண்டு கொள்வதில்லையே ஏன்?

ஒரு சிறுவன் வயசுக்கு வருவது அவன் பெற்றோருக்கு என்ன அவனுக்கே தெரியாது என நினைக்கிறேன்!

.